ஜயதுர்காவின் கருணையினாலே!!!

கிரஹங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும் நன்மை தராதது ஏன்??

ஒவ்வொரு பாவத்திற்கும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் கூறப்பட்டுள்ளது.செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற கிரஹங்கள் இரு பாவத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறது. அவை லக்கினத்திற்கு முழு சுபராக அல்லது பாவராக இருந்தும் ஒரு பாவத்திற்கு நன்மையும் ஒரு பாவத்திற்கு தீமையும் கொடுப்பது ஏன்??

கிரஹங்களுக்கு ஷட் பலம், விம்சோபக பலம் போன்றவை கிரஹங்களின் வலிமையை காட்டுகிறதே தவிர, இரு பாவ ஆதிபத்தியத்தில் எந்த பாவத்திற்கு நன்மை அல்லது தீமையை கொடுக்கும் என காட்டுவதில்லை??

சிலருடைய ஜாதகத்தில் கிரகங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும், நன்மையை தராமலும், சிலருக்கு கிரஹங்கள் நீட்சம், பெற்றாலும் நன்மையே தருவதை பார்க்கிறோம். சில நேரங்களில் நவாம்சத்தில் பலம் பெற்றாலும் அவை முழுவதுமாக பலன் தருவதில்லை.

இதற்கான சூட்சுமம் பராசர மகரிஷி பதா லக்கினத்தில் ரகசியமாக குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.

பதா லக்னம் என்பது பாவாதிபதி பாவத்திலிருந்து எவ்வளவு ராசி கடந்துள்ளதோ, அதே அளவு ராசியை, கிரஹம் இருந்த பாவத்திலிருந்து எண்ணி வரும் ராசி ஆகும்.

இதற்கு ஒரு விதிவிலக்கு உள்ளது.அதன்படி கிரஹங்கள் தன் ராசியிலிருந்து கேந்திரத்தில் இருந்தால் முன்பு கூறியது போல் எண்ணி மீண்டும் 10 ராசியை கூடுதலாக எண்ண வேண்டும்.

பதா என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு அடி, பாதம், கடந்தது என பொருள் படும்.
.
சிலர் பதா ராசியை அந்தபாவ அதிபதியின் நிழல் ராசி என கருதுகின்றனர்.

உதாரணமாக மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் 12 ராசிகளில் இருந்தால் பதா ராசி எப்படி அமையும் என்பதை காண்போம்.

செவ்வாய் இருக்கும் ராசி
மேஷம்—மகரம்
ரிஷபம்—மிதுனம்
மிதுனம்—சிம்மம்
கடகம்—கடகம்
சிம்மம்—தனுசு
கன்னி—கும்பம்
துலாம்—மகரம்
விருச்சிகம்—மிதுனம்
தனுசு—சிம்மம்
மகரம்—கடகம்
கும்பம்—தனுசு
மீனம்—கும்பம்

அடுத்ததாக விருச்சிக ராசிக்கும் அதிபதியான செவ்வாய் 12 ராசிகளில் இருந்தால் பதா ராசி எவ்வாறு அமையும் என்பதை காண்போம்.

செவ்வாய் இருக்கும் ராசி
விருச்சிகம்—சிம்மம்
தனுசு—மகரம்
மகரம்—மீனம்
கும்பம்—கும்பம்
மீனம்—கடகம்
மேஷம்—கன்னி
ரிஷபம்—சிம்மம்
மிதுனம்—மகரம்
கடகம்—மீனம்
சிம்மம்—கும்பம்
கன்னி—கடகம்
துலாம்—கன்னி

மேஷ ராசி அல்லது விருச்சிக ராசி அந்த ஜாதகத்திற்கு எத்தனையாவது பாவமாக வருகிறதோ அதனை பொறுத்து பதா ராசியின் பெயர் அமையும்.

1ம் பாவ பதா ராசி, 2ம் பாவ பதா ராசி, 3ம் பாவ பதா ராசி……………. கடைசியாக 12 பாவ பதா ராசி.

12 பாவங்களுக்கும் பதா ராசி பார்க்கும் போது 12 ராசிகள் இதன் நிழலாக அமைவதை காணமுடிகிறது.

ஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அதன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகத்திலிருந்து எண்ணி பதா ராசியை தீர்மானிக்க வேண்டும். இதனைபோலவே மற்ற கிரஹங்களுக்கும் அதனதன் ஆட்சி வீட்டிலிருந்து பதாராசியை கணக்கிட வேண்டும்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் தன்னுடைய பாவத்திலிருந்து 3,4,5,9,10,11ம் ராசியில் மட்டும் தான் பதா ராசி அமையும் என்பதாம். இதிலும் ஒரு ரகசியம் இருக்கிறது.

சரி மறுபடியும் தலைப்பிற்கு வருவோம். கிரஹங்கள் பலமாக இருந்தும் பலன் தருவதில்லையே ஏன்??

கிரகங்கள் உட்சம், ஆட்சி,நீட்சம் அடையும் போதும், இரு பாவத்திற்கு ஆதிபத்தியம் பெறும் போதும் அதற்குரிய பதா ராசியில் எந்த கிரஹம் இருக்கிறதோ அதனை பொறுத்து பலன் அமையும்.

பதா ராசியில் நட்பு கிரஹம் இருந்தால் நற்பலனும், பகை கிரஹங்கள் இருந்தால் தீய பலனும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு கிரஹமும் எந்த வீட்டில் உட்சம், நீசம் அடைகிறதோ, அதற்கான பதா ராசியை கீழே குறிப்பிட்டுள்ளேன். உட்ச ராசியிலிருந்து எண்ணினாலும், நீச வீட்டிலிருந்து எண்ணினாலும் ஒரே ராசியே பதா ராசியாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

12 ராசிகளுக்கும் உண்டான அதிபர்கள் உட்சம், நீசம் அடைந்தால் கீழேயுள்ள ராசி பதா ராசியாக அமையும்.

ராசி/பாவாதிபதி—உட்சம்/நீச பதா ராசி
மேஷம் செவ்வாய்—கடகம்
ரிஷபம் சுக்கிரன்—மகரம்
மிதுனம் புதன்—கன்னி
கடகம் சந்திரன்—மீனம்
சிம்மம் சூரியன்—தனுசு
கன்னி புதன்—மிதுனம்
துலாம் சுக்கிரன்— சிம்மம்
விருச்சிகம் செவ்வாய்—மீனம்
தனுசு குரு—கும்பம்
மகரம் சனி—மேஷம்
கும்பம் சனி —மிதுனம்
மீனம் குரு—விருச்சிகம்

மேலே குறிப்பிட்ட ராசிகளில் உள்ள கிரஹத்திற்கும் உட்சம் பெற்ற கிரஹத்திற்கும் உள்ள நட்பு, பகையே அந்த பாவ பலனை தீர்மானிக்கும்.
உதாரணமாக சுக்கிரன் உட்சம் அல்லது நீட்சம் பெற்று உள்ளபோது மகரத்தில் உள்ள கிரஹம் ரிஷப பாவத்தையும், சிம்மத்தில் உள்ள கிரஹம் துலா பாவத்தையும் தீர்மானிக்கும் என்பதாகும். இங்கு சனி, புதன், ராகு கிரஹங்கள் இருப்பின் நற்பலனும், சூரியன், செவ்வாய், சந்திரன், குரு, கேது இருப்பின் கெடு பலனும் சுக்கிரனுக்கு தரும்.

இதைப்போலவே மற்ற கிரஹத்திற்கும் பார்க்கவும்.

இப்பதிவு மிக பெரிதாக போகிறது என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

Related Posts

காகினி முறை ஜோதிட சூட்சுமம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிடத்தில் எந்த ஊர் ஜாதகருக்கு பலன் கொடுக்கும் என்பதற்கு சில கணிதங்களை ரகசியத்துள் ரகசியமாக நம்முடைய முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள். அதில் நட்சத்திர நாம...
Read More

திருமணத்திற்கு குரு பலம் தேவையா?

Parasari Dr. B. Ayyappa Sharma
கிரஹங்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை அறிந்தாலும் அவை எப்போது அதனை செயல்படுத்தும் என்பதனை அறிவது இன்றியமையாதது ஆகும். கால நேரத்தை அறிய நிறைய உபாயங்களை...
Read More

மருத்துவ ஜோதிடத்தில் கபம், பித்தம் மற்றும் வாதம்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஜோதிடர்களிடம் வருகின்ற பொழுது அவர்கள் எதிர்பார்ப்பில் தன் உடல்நிலையைப் பற்றியது ஒன்றாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற...
Read More