கிரஹங்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை அறிந்தாலும் அவை எப்போது அதனை செயல்படுத்தும் என்பதனை அறிவது இன்றியமையாதது ஆகும். கால நேரத்தை அறிய நிறைய உபாயங்களை வேதாங்க ஜோதிஷத்தில் கொடுத்து இருந்தாலும் தசா புத்தி மற்றும் கோட்சார நிலையே அதிகமாக பயன்படுத்தபடுகிறது. இதிலும் தசா புத்தியில் அந்தரம், சூட்சுமம் போன்ற பல்வேறு உபபிரிவுகள் இருப்பதால் நீண்ட ஆய்வுக்கு பின்னரே நன்மை தருமா அல்லது தீமை தருமா என்பதனை கண்டறிய முடிகிறது.

ஆனால் அதேவேளையில் கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு கிரஹங்கள் எந்தந்த பாவத்தில் பிரவேசிக்கிறதோ அந்தந்த பாவத்தினை பொறுத்து நன்மை அல்லது தீமை (இங்கும் பினாஷ்டவர்க்கம், கக்‌ஷயம், சோத்ய பிண்டம், உலோக மூர்த்தி, வேதை, எதிர்வேதை, சிறப்பு நக்ஷத்திரம், தாரை பலன், நக்ஷத்திர பார்வை, அங்க நக்ஷத்திரங்கள், லத்தை, பல்வேறு சக்கரங்களான சர்வோதபத்திரம், சூரிய கலாநலம், சந்திர கலாநலம், சூலம், திரிபாதகி போன்றவைகளினால் மாற்றம் ஏற்பட்டாலும் இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு புத்தகம் எழுதலாம்) உறுதியான பலனை ஒவ்வொரு கிரஹத்திற்கும் கொடுத்துள்ளனர். இதுவே ஜோதிடருக்கும், மக்களுக்கும் கோட்சாரத்தின் மீது ஈர்ப்புவர முக்கிய காரணம் ஆகும்.

அதிலும் நீண்ட நாட்கள் ஒருராசியில் இருந்து நன்மை கொடுக்கும் கிரஹங்களை யார்தான் விரும்பமாட்டார்கள்? இதில் குரு, ராகு- கேது, சனி பகவான் போன்றோர் முக்கிய பங்கு வகிக்கினறனர். இதில் குரு மட்டுமே சுபராவார். பிறந்த ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தாலும் அல்லது பலம் பெறாமல் இருந்தாலும் கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு குருவானவர் 2,5,7,9,11 ம் ராசியில் பிரவேசிக்கும் போது சுபபலனை தருவதாக ஜோதிஷ கிரந்தங்கள் பல கூறினாலும், அனுபவத்திலும் பல ஜாதகங்களில் அதுசரியாகவே வருவதை காணமுடிகிறது. (நன்மையின் அளவை கணக்கிட நான் முன் பத்தியில் கூறப்பட்ட அத்தனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்).

எனவே எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதற்கும் உதாரணமாக வீடு கட்ட, திருமணம் செய்ய, உபநயனம் செய்ய, தொழில் தொடங்க, மந்திர உபதேசம் பெற, காசி, ராமேஸ்வரம் யாத்திரை செய்ய etc போன்றவற்றிற்கு அதற்குரிய கிரஹங்கள் அந்த நேரத்தில் பலமாக இருக்கிறதா என்பதை நீண்ட ஆய்வுசெய்து தசா புத்தியில் அறிவதை விட கோட்சாரத்தில் ஒரு வருடம் ஒருராசியில் பிரவேசிக்ககூடிய சுப கிரஹமான குரு நன்மை தருவாரா என்பதை சுலபமாக அறியமுடியுமானதால் இதற்கு இவ்வுளவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் பலமாக உள்ள ஒருவருக்கு குரு கோட்சாரத்தில் எந்த நிலையில் உள்ள போதும் குருபலம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்பதற்கு கிரந்தங்கள் பல இருந்தாலும் அவை நடைமுறையிலும் ஒத்து வருவதை காண முடிகிறது. மேலும் கோட்சாரத்தினை பற்றி கூறும் நூல்களான ஜாதக தேஸ்மார்க்கம், பலதீபிகை, ஜாதாகபரணம், ஜாதக சார தீபம், ஜாதக பாரிஜாதம், வித்யா மாதவ்வியம், சந்திரகலா நாடி போன்றவற்றில் குருவின் கோட்சார பலனை கூறியுள்ளனரே தவிர குரு கிரஹம் ஒருவருக்கு கோட்சாரத்தில் பலமாக உள்ளபோதுதான் திருமனம் நடக்கும் என்பதனை நான் படித்த வரை எங்கும் கூறவில்லை.

எனவே அடியேன் ஜோதிட மேதைகளை கேட்டுகொள்வது யாதெனில் குருபலம் என்பதனை ஆராயும் முன்னர் குரு கோட்சாரத்தில் பலமாக (ஜென்ம ராசிக்கு 2,5,7,9,11ல் ) இருந்தும் நன்மையான பலன் தராமல் இருந்துள்ளாரா? அப்படியெனில் அதற்காக காரணம் என்ன? என்பதனை ஆராய்ந்தால் ஜோதிட பெருமக்களுக்கு உதவியாக இருக்கும் என கூறி இன்னும் பல கருத்துக்களை கூற விரும்பினாலும் நீண்ண்ண்டதாக போகுமென்பதால் நன்றியுடன் விடைபெறுகிறேன்.

திருமணத்தினை குருபலம் தீர்மாணிக்கவில்லை என்று கொண்டோமானால் அது திருமண நிகழ்ச்சியை மையமாக கொண்டுள்ளது. இங்கு திருமணம் என்பது ஒருநாளை குறிக்கும் சடங்கா அல்லது இருவரின் வாழ்க்கையா? அப்படி வாழ்க்கை என்று கொண்டோமானால் சுபகிரஹமான குருவின் பலம் ஆனது கோட்சாரத்தில் மணமக்களுக்கு நன்றாக இல்லாமல் செய்யப்படும் திருமணம் மிகுந்த நன்மையை கொடுக்காது என்பதை நாம் ஏன் மறுக்கவேண்டும்.அப்படி நாம் மறுக்கவில்லை என்றால் குருபலம் அவசியம் பார்க்கவேண்டும் எனபது சரியாகிறதே!!

 

Related Posts

சூரியன் பாவத்தில் இருக்கும் பலன் பொதுவானது.

Parasari Dr. B. Ayyappa Sharma
  ஜயதுர்காவின் கருணையினாலே!!! சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகருக்கு அகம்பாவம், திமிரு, அகந்தை இருக்கும். ஜாதகரை கோபப்படுத்த அந்த பாவ...
Read More

புஷ்கராம்சம் ஒரு பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவின் கருணையினாலே… ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது....
Read More

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை:...
Read More