ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என ஆராய்வது ஜோதிஷத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறது

கிரஹன்களுக்குண்டான வயதினை பற்றி ஒரு நூலில்

பாலோ தராஜ குமாரகஸ்த்ரிம் ஸத்குரு: ஷோடஸவத்ஸர: ஸித:
பங்சாஸதர்கோ விதுரப்தஸப்ததி: ஸதாப்தஸங்க்யா ஸனிராஹூகேதவ:

பொருள்: செவ்வாய் குழந்தையாகவும், புதன் சிறுவனாகவும், குரு 30 வயதானவராகவும், சுக்கிரன் 16 வயதுள்ளவளாகவும், சூரியன் 50 வயதுள்ளவராகவும், சந்திரன் 70 வயது உடையவராகவும், சனி, ராஹூ, கேது 100 வயது உடையவராகவும் இருக்கிறார்கள்.

இங்கே குறிப்பிடப்பட்ட வயதுகள் கிரஹங்களின் ஆதிக்கத்தினை பற்றி குறிப்பிடாமல் கிரஹங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று கூறியுள்ளனர் என கருதுகிறேன்.

அதாவது கிரஹங்களை ஒரு நபர் என வைத்துக்கொண்டால் அதனின் செயலானது எத்தனை வயது கொண்டவராக இருக்கும் என்பதனையே இவ்வாறு கூறியுள்ளனர்

செவ்வாய் (2) குழந்தையாக செயல்படும் என்றால் விளைவினை பற்றி சிந்திக்காமல் அது செயல்படும் என எடுத்துக்கொள்ள வேண்டும். புதன் (10) சிறுவனாக செயல்படும் என்றால் எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல் யாரையேனும் சார்ந்தே இருக்கும் என்றும், குரு (30) துடிப்போடு குறிக்கோளை நோக்கி செல்லக்கூடியதாகவும், சுக்கிரன் (16) புலனால் உணரக்கூடியதற்கு எல்லாம் ஆசைபடக்கூடியதாகவும், சூரியன் (50) பொறுப்புள்ள மரியாதை எதிர்பார்க்கிற நபராகவும், சந்திரன் (70) எல்லோரையும் அரவணைக்கிற
அனுபவசாலியாகவும், சனி ராகு கேது (100) பொறுமை, அனுபவம், இயலாமை போன்றவற்றினை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம்.

வேறு சில நூல்களில்
சூரியன் – 23 வயதிலிருந்து 41 வயதுவரை
சந்திரன் – 0 வயதிலிருந்து 4 வயதுவரை
செவ்வாய் – 42 வயதிலிருந்து 56 வயதுவரை
புதன் – 5 வயதிலிருந்து 14 வயதுவரை
குரு – 57 வயதிலிருந்து 68 வயதுவரை
சுக்கிரன் – 15 வயதிலிருந்து 22 வயதுவரை
சனி – 69 வயதிலிருந்து 108 வயதுவரை
என குறிபிடப்பட்டிருக்கிறது.

இதனை கொண்டு ஜாதகருடைய இத்தனையாவது வயதில் இந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அறிந்துகொள்ளலாம். கிரஹங்களை ஹோரா வரிசைக்கு எதிர் சுற்றில் எழுதினால் ஒரு ஒழுங்கு முறையில் கீழ்கண்டவாறு கிடைக்கும்

சந்திரன் – 0 வயதிலிருந்து 4 வயதுவரை

புதன் – 5 வயதிலிருந்து 14 வயதுவரை

சுக்கிரன் – 15 வயதிலிருந்து 22 வயதுவரை

சூரியன் – 23 வயதிலிருந்து 41 வயதுவரை

செவ்வாய் – 42 வயதிலிருந்து 56 வயதுவரை

குரு – 57 வயதிலிருந்து 68 வயதுவரை

சனி – 69 வயதிலிருந்து 108 வயதுவரை இவ்வாறு கிடைக்கும்

இதன் கருத்திற்கு எதிர் கருத்தாக வராஹமிஹிரர் தன்னுடய பிருஹத் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரஹகத்தின் ஆதிக்கம் குறிப்பிட்ட வயதில் இருக்குமென கூறுகிறார்.

அதன்படி

சந்திரன் – 0 வயதிலிருந்து 1 வயதுவரை

செவ்வாய் – 1 வயதிலிருந்து 3 வயதுவரை

புதன் – 3 வயதிலிருந்து 12 வயதுவரை

சுக்கிரன் – 12 வயதிலிருந்து 32 வயதுவரை

குரு – 32 வயதிலிருந்து 50 வயதுவரை

சூரியன் – 50 வயதிலிருந்து 70 வயதுவரை

சனி – 70 வயதிலிருந்து 120 வயதுவரை ஆதிக்கம் செலுத்துகிறது

இருவேறு கருத்துக்கள் இருப்பதினால் ஜோதிஷிகர்களாகிய நாம் ஆய்விற்கு உட்படுத்தி இதனில் தெளிவுறவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வேறு சில நூல்களில் கிரஹங்கள் ஜாதகரின் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே நன்மையோ/தீமையோ அதிகம் தருகின்றன என கூறப்பட்டுள்ளது. அதன்படி

சூரியன – 22

சந்திரன் 24

செவ்வாய் 28

புதன் 32

குரு 16

சுக்கிரன் 25

சனி 36

ராகு 48

கேது 48 இதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்

இதிலிருந்து கிரஹங்கள் நம்மீது செலுத்தும் ஆதிக்க
வயதினை புரிந்துகொள்ளமுடிகிறது. இதனை ராசிகளுக்கு கூறப்பட்ட பாகைககான நபரை தொடர்புபடுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. இதன் படி பராசரா ஹோராவில்

க்ரமாத் பால குமாரோऽத யுவா வ்ருத்தஸ்ததா ம்ருத
ஷட்ஶைரஸமே கேட: ஸமே ஜ்ஞேயோ விபர்யயாத்
(பராசர ஹோரா- கிரஹாவஸ்தாத்யாய)

ஆண் ராசிகளை ஐந்து சம பாகையாக அதாவது 6 பாகை கொண்ட அளவாக பிரித்தால் அதன் பாகமானது பால , குமார, யுவ, விருத்த, மிருத என இருக்கிறது.
பெண் ராசிகளை ஐந்து சம பாகையாக அதாவது 6 பாகை கொண்ட அளவாக பிரித்தால் அதன் பாகமானது மிருத, விருத்த, யுவ, குமார, பால என இருக்கிறது.

பால- பாலகன்/ குழந்தை
குமார- குமாரன்/ சிறார்
யுவ- வாலிபன்/ இளைஞன்
விருத்த- வயோதிகர்/ மூப்புடையோர்
மிருத- இறக்கும் தருவாயில் உள்ளவர்

பலம் பாதமிதம் பாலே பலார்தம் ச குமாரகே
யூநி பூர்ணம் பலம் ஜ்ஞேயம் வ்ருத்தே கிஞ்சித் ம்ருதே ச கம்

பாலனாக இருக்கும்போது கால்பங்கு பலமும், குமாரத்தில் அரை பங்கு பலமும், யுவத்தில் முழுபலமும், விருத்தத்தில் எட்டில் ஒரு பங்கு பலமும், மிருதத்தில் பலம் இல்லாமையும் கிரஹங்கள் அடைகின்றன, கிரஹங்களுக்கான வயதினையும் அது ராசியில் இருக்கக்கூடிய நிலையையும் கருத்தில் கொண்டு பலன் கூறினால் பலன் சரியாக வரும் என்பது என் கருத்து. ராசி சந்தியில் இருக்கக்கூடிய கிரஹங்கள் எந்த பலத்தில் இருக்கிறது என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும்.

ராசியைப்போலவே பாவத்திற்கும் இதனை பொறுத்தி பார்க்கவேண்டும். பராசர தன்னுடைய ஹோராவில்

உக்தா லக்னாதி பாவாநாம் தீப்தாம்ஸாஸ்திதிஸம்மிதா
தஸ்மாத் பாவாத்புர: ப்ருஷ்டே தித்யம்ஸைஸ்தத்பலம் ஸ்ப்ருதம்
லக்னாந்தித்யம்சத: பூர்வ பாவாராம்ப: ப்ராஜயதே
தித்யம்ஸை: பரதஸ்தஸ்ய பூர்தி: சந்தி ச தெள ஸ்ம்ருதெள
பாவாரம்போ பலாரம்போ பூர்ன பாவஸமே க்ரஹே
பலம் சூந்யம் ச ஜ்ஞேயம் மத்யே அநுபாதத:

இதன் பொருள் ஒரு பாவ முனையின் முன்னால் 15 பாகை பிருவிருத்தி எனப்படும். பாவ முனைக்கு முன்னால் 15 பாகையில்தான் ஒருபாவம் ஆரம்பிக்கின்றது பாவ முனையின் பின் 15 பாகை பூர்த்தி எனப்படும். இங்கு பாவமானது முடிவடைகிறது. பாவ முனைக்கு கிரஹங்கள் எவ்வாறு நெருங்கி இருகிறதோ அதற்கேற்றவாறே கிரஹங்கள் நன்மையோ, தீமையோ தருகின்றன. அதாவது பாவ ஆரம்பத்தில் இருக்கும் கிரஹங்களும், பாவ முடிவில் இருக்கும் கிரஹங்களும் பலமாக இருந்தாலும் கூட நன்மையை முழுமையாக தருவதில்லை என கூறுகிறார். மேலும் கிரஹங்கள் பாவத்திற்கு நெருங்கிய மதிப்பின் அளவீட்டை ராஷ்மி பலம் கொண்டு குறிக்கும் முறையும் இருந்திருக்கிறது. 10 நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைக்கு பாவமத்திமம் மாறும் என்பதால் அதனை பொறுத்து கிரஹங்கள் கொடுக்கும் நன்மை/தீமையின்அளவில் வித்தியாசம் வரலாம்.

ஒரு பாவமத்திமத்திற்கு முன், பின் 3 பாகைகளுக்குள் இருக்கக்கூடிய கிரஹங்களே முழுமையான வேலை செய்கின்றன. அடுத்ததாக முன் பின் 3 பாகை தாண்டி 9 (3+6) பாகைக்குள் இருக்ககூடிய கிரஹங்கள் வேலைசெய்கின்றன பாவத்தின் மத்திமம் எந்த ராசியில் இருக்கிறதோ அதனின் ஆன்/ பெண் தன்மையை பொறுத்து பாவத்திற்கும் பால, குமார, யுவ, விருத்த, மிருத்யு தன்மை ஏற்படும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து ஆகும்.

Leave A Comment

three × four =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More